Showing posts with label விசாலாக்ஷி. Show all posts
Showing posts with label விசாலாக்ஷி. Show all posts

Friday, June 8, 2012

சிவலோக நாதனைக் கண்டு

சின்ன தாத்தா சுப்பராமய்யரின் மனைவி விசாலாக்ஷி அம்மாள். சுப்பராமய்யர் கண்டிப்பும் கம்பீரமும் கலந்த ஆளுமை மிக்கவர். அவர் மீசையை மேலே முறுக்கியபடி வைத்திருப்பார். அதனால் மீசைக்காரர் என்றே  அழைக்கப்பட்டார். ரௌத்ரமும்  நேர்மையும் மிக்கவர். பயமற்றவர். அவருடைய மனைவி ஏதோ நோய்வாய்ப் பட்டார். அந்த காலம். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நடுத்தர வயது. உடல் பலகீனமாகி பாட்டி நலிந்திருந்தார். அப்போது தனக்கு ஏதோ பயமாக இருப்பதாகவும் கண் முன் இருள் மண்டி வருவதாகவும் சொல்லி பயந்தாராம். தாத்தா ஏன்  பயப்படுகிறாய்? தைரியமாய் இரு. கடவுளை நினை என்றாராம். (அப்போதும் ஆணைகள்தான் !). ஏதாவது பாடு என்றாராம். பாட்டி "சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர் "என்ற பாடலை குரல் நடுங்க பாடினாராம். கண்ணீர் வழிய. இருளின் அச்சத்தைப் போக்கி அந்த பாடல் அவருக்கு உள் ஒளி தந்திருக்க வேண்டும். " பாடு/.. பாடு பாடிக்கொண்டே இரு" என்றாராம். தைரியம் கொள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம். நலிந்த குரலின் மெலிந்த சுரத்தில் பாட்டியின் பாடல் ஏதோ ஒரு கணத்தில் தேங்கி நின்றபோனது. அணைந்த அகல் விளக்கின் நெளியும் புகைபோல அந்த குரல் சற்றுநேரம் அந்த வெளியில் தேங்கி மறைந்தது.  பிறகு அங்கிருந்தவை கரைந்த கண்களும் உறைந்த முகமும்.

 அவர் கண்டிப்பாக சிவலோக நாதனைக் கண்டிருக்க வேண்டும்.

http://www.youtube.com/watch?v=e6l-9OaHyso
இந்த இணைப்பில் அந்த பாடலைக் கேளுங்கள். பாருங்கள். நந்தியின் கொம்பு இடையே சிவன். பிறகு நீல வானம். விசாலாட்சி பாட்டியின் பாட்டுக்கு ஏற்றபடி அமைந்திருக்கு இந்த ஒளிக்காட்சி கூட.  பாட்டியின் புகைப்படம் இல்லை. நான் பார்த்தது இல்லை. ஆனால் இந்த பாடலில் அவர் தெரிகிறார்.